Wednesday 21 June 2017


சேர வாரும் செகத்தீரே!
மார்க்ஸ் 200
        மார்க்சியம்/பொதுவுடைமை என்னும் கருத்துநிலை குறித்த பார்வை கொண்டோரைப் பொத்தாம் பொதுவாக மூன்றாக வகைப்படுத்திக் கொள்ளலாம்: மார்க்சியர்(Marxist), மார்க்சியல்லாதார்(Non-Marxist), மார்க்சிய எதிர்ப்பாளர்(Auti-Marxist).
        மார்க்சியரையும் கட்சி மார்க்சியர், கட்சி சாரா மார்க்சியரென்றல்லாம். உள்வகைப்படுத்தலாம் (கட்சிசாரா மார்க்சியர் இருக்க இயலாதென்பது பொதுவாகக் கட்சி மார்க்சியர் நிலைப்பாடு). மார்க்சியர்(Marxist) மார்க்சியலார்(Marxiolagist) என்றெல்லாமும் பார்க்க இயலும். இருக்கட்டும்.
        என்னைக் கட்சிசாரா மார்க்சிய ஒத்துணர்வாளன்(sympathizer) என்று சொல்லிக் கொள்ளலாம். இதுவும் இருக்கட்டும்.
        மார்க்சியர் இப்போது கருதவேண்டியது, மார்க்சியரல்லாதாரை மார்க்சியராக்குவது கூட அல்ல; எதிர்ப்பாளரை நோக்கிக் செல்லவிடாமல் செய்வதுதான். ஆனால், மார்க்சிய இணக்கம் கொண்ட என்போன்றோரைக் கூட - மேலோட்டமான கருத்து வேறுபாட்டைச் சொல்வதற்கே - மார்க்சியப்பிரஷ்டம் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.
        மத அடிப்படைவாத இருள் மிகவன்மையாகச் சூழ்ந்துவரும் நிலையில் மார்க்சியர் அந்தக் காலத் தஞ்சை மாவட்ட மாப்பிள்ளை முறுக்கிலிருப்பது நல்லதல்ல.
        இந்தப் பின்னணியில்தான் தோழர் தா.பா. நூலை ஆர்வமாகப் படித்தேன்.
        முன்னுரையைத் தன்னடக்கத்துடன் தொடங்கியுள்ளார் தா.பா. அது வெற்று மரபன்று என்று உணர முடிகிறது. எனினும் விபரீத சக்திகள் அடர்ந்து வரும் சூழலில் இனி பொறுப்பதில்லை என்று கருதி எழுத முற்பட்டதாகக் கூறுகிறார். மிகச் சரி.
        ஐந்து உட்பிரிவுகளுள் முதலாவது, ‘கேள்விகள்’ என்பதாகும். சிறிதும் பெரிதுமாக 41 வினாக்கள் வரிசை எண்ணிட்டு அடுக்கப்பட்டுள்ளன. ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருவது ஏன்?’ என்பது முதல் வினா. கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருகின்றனவா? என்று அவர் கேட்கவில்லை; வலுவிழந்து வருவதை ஏற்றுக் கொள்கிறார். இந்த அடிப்படை வினாவிலிருந்து கிளைத்தவைதாம் பிறவினாக்கள் என்று சொல்லலாம்.
        அரசியல் - பொருளாதாரம், வரலாறு, தமிழகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொதுவுடைமைக் கட்சிகளின் திட்டம் - செயல்பாடு, மெய்யியல் முதலியவற்றின் அடிப்படையில் சாமானியம் முதல் நுட்பமானவை வரை, பலருக்கும் பல நேரங்களில் எழுந்த வினாக்களை ஒரு சேர அவர் அடுக்கியுள்ளார். பொதுவுடைமையரின் வறட்டுத்தனங்கள், தவறுகள்(என அவர் கருதுவன) ஆகியவற்றோடு அபாண்டமாகச் சுமத்தப்பட்ட பழிகளையும் ஆதாரங்களோடு சுட்டுகிறார்.
        இருவேறு எல்லைக்கிடைப்பட்ட பொதுவுடைமைக்கட்சிகள், பிற இடதுசாரிகளுள் அவரது விடை தேடும் முறை, விளக்கம் தீர்வு முதலியவற்றை ஏற்காதவர்கள், இவ்வாறு ஏற்காததோடு சில பல வினாக்களைத் தவிர்க்கலாம் என்பவர்கள் புதிதாகச் சிலபல வினாக்களைச் சேர்க்கலாம் என்பவர்கள், எவராயினும் வினாக்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கக்கூடாது. இதுவே இந்த நூலின் முதலாவது முக்கியத்துவம்.
        வினாக்கள், விளக்கங்கள், தீர்வுகளுக்காகப் பட்டறிவும் பன்னூலறிவும் கொண்டு வரலாறு, நிகழ்ச்சிகள், புள்ளி விவரங்கள் முதலியவற்றை அவர் தந்து செல்லும் பாங்கு படிப்பார்வத்தைத் தூண்டுகிறது. சில நூல்களைப் பரிந்துரைத்துள்ளார்.
        ஊன்றிப் படிக்க வேண்டிய பகுதிகள் தடிப்பெழுத்தில் தரப்பட்டுள்ளன.
மேதைகள், அறிஞர்கள். படிப்பாளிகளின் இயல்பும் எளிமையும் பற்றி அவர் காட்டும் சில பகுதிகள் நெகிழச் செய்கின்றன. சான்றாகப் பி.சி. ஜோசி மும்பையில் உருவாக்கிய கம்யூன் பற்றிய பகுதி(பக்.203-204).
        அணிந்துரையில் ந. முத்துமோகன் “இந்த நூலுக்கு ஒரு பதிப்பாசிரியர் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என நயத்தக்க நாகரிகத்தோடு ஒரு விமரிசனக் குறிப்பை வைக்கிறார். தா.பா. சில பகுதிகளை முழுமையாகப் பக்கம்பக்கமாகக் காட்டியுள்ளார். முத்துமோகன் சொன்னது சரிதான் என்றாலும், நூலின் நெகிழ்வு சலிப்பில்லாத ஓட்டத்திற்குக் காரணமென்று தோன்றுகிறது. மிகச்சில இடங்கள் தானெனினும் அணி நடையும் மிகையின்றி நயஞ்சேர்க்கிறது.
        சரளமாக எழுதிச் சொல்லும்போது சில இடங்களில் சிறிதே சுயமுரண் தலைகாட்டுவதாக எனக்குத்  தோன்றுகிறது. “பொதுவுடைமை என்பது மனிதநேயத்தை அறநெறியாகக் கொண்ட அரசியல் பொருளாதார அமைப்பாகும். எனவே, விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு விஞ்ஞானமுறையில் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்கிறார். மனிதநேய அறநெறியும் மார்க்சிய விஞ்ஞான முறையும் முரணானவையல்ல என்றாலும் வெவ்வேறானவை.
1. மார்க்சியத்தின் (அதன் பொருள்முதல்வாத) அடிப்படை இன்றும் நிறுவப்பட்டு
  வருகிறது.
2. பொதுவுடைமைக் கட்சிகள் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும்.
3. மாநில(தேசிய இன?)க் கட்சிப்பிரிவுகளுக்குத் தனித்தியங்கும் உரிமை வேண்டும்.
4. சமூகப் பிரச்சினைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
5. பொதுவுடைமைக் கட்சிகள் அல்லாத சனநாயக் கட்சிகளுடன் கொள்ளும் உறவில்
  வறட்டுத்தனம் கூடாது. அதேநேரத்தில் விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கையும்
  தேவை என்பனபோலப் பலவற்றைக் கூறுகிறார் தா.பா. நிறைவாக அவரைக் குறித்த
  தனிப்பட்ட அகவய, புறவய விமர்சன நியாயங்களுக்கு அப்பால்
        எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்னும் நிலையில் அவரது நூலைத் திறந்த மனத்தோடு படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.


No comments:

Post a Comment